நோனா உடம்பும் உயிரும் மடல்ஏறும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொறுத்த லில்லாத உடம்பும் உயிரும் மடலேறும்:
பரிப்பெருமாள்: பொறுத்த லில்லாத உடம்பும் உயிரும் மடலேறும்:
பரிதி: யாமுற்ற காமநோய் பொறுக்கலாவுடம்பும் உயிரும் மடலேறாயிருந்தது;
காலிங்கர்: யான் உற்ற காமநோய் பொறுக்கலா உடம்பும் உயிரும் இங்ஙனம் மடலேறுமாயிருந்தது;
பரிமேலழகர்: ('நாணுடைய நுமக்கு அது முடியாது', என மடல் விலக்கல் உற்றாட்குச் சொல்லியது) அவ் வருத்தத்தினைப் பொறாத உடம்பும் உயிரும் அதற்கு ஏமமாய மடல் மாவினை ஊரக் கருதாநின்றன; [அதற்கு-அவ்வருத்தத்தினை நீக்குதற்கு; ஊர-ஏறிச்செலுத்த]
'காமநோய் பொறுக்கலா உடம்பும் உயிரும் மடலேறும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'காமம் தாங்காத உடம்பும் உயிரும்', 'காம நோயினைப் பொறுக்க இயலாத உடம்பும் உயிரும் பாதுகாவலாக மடலேறும்',
'காதல் துன்பத்தைப் பொறுக்க முடியாத உடலும் உயிரும் அதற்குப் பாதுகாவலாகிய மடல் குதிரையை ஊரும் (ஏறும்)',
'காம நோயின் வேதனையைப் பொறுக்க முடியாமல் என் உடலும் உயிரும் மடலேறத் தூண்டுகின்றன' என்ற பொருளில் உரை தந்தனர்.
காதல்நோவைத் தாங்கமாட்டாத உடம்பும் உயிரும் மடலேறுமாயிருந்தன என்பது இப்பகுதியின் பொருள்.
நாணினை நீக்கி நிறுத்து:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாணினை நீக்கி நின்று.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உடம்போடு உயிரும் மடலேறுமெனத் தலைமகன் கூறியது.
பரிப்பெருமாள்: நாணினை நீக்கி நிறுத்தி.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது 'நீர் கூறிய மடலேறு நாணமுடையார்க்குக் கூடுமோ!' என்ற தோழிக்கு, நாணினை நீக்கி உடம்போடு உயிரும் மடலேறுமெனத் தலைமகன் கூறியது.
பரிதி: முன்னின்ற நாணினையும் எடுத்தெறிந்து இதிலே வலிபெறுகின்றது என்று உரைத்தான் தலைமகன் என்றவாறு.
காலிங்கர்: முன்னின்ற நாணினையும் எடுத்து எறிந்து;
காலிங்கர் குறிப்புரை: இனி என்னை செயற்பாலது என்று பின்னும் இதனையே வலிபெறுத்து உரைத்தான் தலைமகன் என்றவாறு.
பரிமேலழகர்: அதனை விலக்குவதாய நாணினை அகற்றி. [அதனை-மடன்மா ஏறுதலை]
பரிமேலழகர் கருத்துரை: 'வருந்தினார்க்கு' என மேல் வந்தமையின், செயப்படு பொருள் ஈண்டுக் கூறார் ஆயினார். மடல் - ஆகுபெயர். 'நீக்கி நிறுத்து' என்பது ஒரு சொல் நீர்மைத்து. அதுவும் இது பொழுது நீங்கிற்று என்பான், 'உடம்பும் உயிரும்' என்றான், அவைதாம் தம்முள் நீங்காமற்பொருட்டு. 'மடலேறும்' என்றது, அவள் தன் ஆற்றாமையறிந்து கடிதிற்குறை நேர்தல் நோக்கி. [அவைதாம்-உடம்பும் உயிரும்]
'நாணினை எடுத்து எறிந்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வெட்கத்தை விட்டு மடல் ஏறத் துணியும்', 'மடலேறத் தடையாக இருந்த நாணத்தைத் தள்ளி வைத்துவிட்டு', 'மடலேறுதலைத் தடுப்பதாகிய நாணினை அகற்றி விட்டு', 'வெட்கத்தையும் விட்டுவிட்டு' என்றபடி பொருள் உரைத்தனர்.
நாணத்தை எடுத்து எறிந்து என்பது இப்பகுதியின் பொருள்.
|