கொடியார் கொடுமையின் தாம்கொடிய:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொடியவர் செய்த கொடுமையினும் தாம் கொடியனவாய் நின்றன;
பரிதி: கொடிய நாயகனிலும்;
காலிங்கர்: நெஞ்சே! நமக்கும் பிரிவு என்பதோர் கொடுமை செய்த அக்கொடியாரது கொடுமையினும் தாம் சாலக் கொடியவாய் இருந்தன யாவை எனின்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) அக்கொடியாரது கொடுமைக்கு மேலே தாம் கொடுமை செய்யாநின்றன.
பரிமேலழகர் குறிப்புரை: தன்னாற்றாமை கருதாது பிரிதலின், 'கொடியார்' என்றாள். கொடுமை: கடிதின் வாராது நீட்டித்தல். அவர் பிரிவானும் நீட்டிப்பானும் உளதாய ஆற்றாமைக்குக் கண்ணோடாமை மேலும் பண்டையின் நெடியவாய்க் கொடியவாகாநின்றன என்பதாம். [கடிதின் - விரைந்து; கண்ணோடாமை - முகங்கொடாமை; பண்டையின் -முன்னையினும்]
'கொடியவர் செய்த கொடுமையினும் தாம் கொடியனவாய் நின்றன' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிரிந்த தலைவரினும் கொடுமையுடையன', 'என்னைப் பிரிந்து என் காதலர் எனக்குச் செய்துவிட்ட கொடுமைகளைவிட இந்த இரவு அதிகம் கொடுமை செய்கிறது', 'பிரிந்து போன கொடியவரது கொடுமையைப் பார்க்கிலும் அதிகக் கொடுமை செய்கின்றன', 'கொடியாரது கொடுமையை விடக் கொடியனவாய் உள்ளன' என்ற பொருளில் உரை தந்தனர்.
கொடியாரது கொடுமையை விடக் கொடியன என்பது இப்பகுதியின் பொருள்.
இந்நாள் நெடிய கழியும் இரா:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இக்காலத்து நெடியவாய்க் கழிகின்ற இராப்பொழுதுகள்.
மணக்குடவர் குறிப்புரை: இது பொழுது விடிகின்றதில்லை யென்று தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பரிதி: நெடிய இரா என்றவாறு.
காலிங்கர்: நம்மை ஒருபொழுதும் அறியாது இன்னாவாய் நெடியவாய்ப் பெருகிச் செல்லும் பல யாமங்களை நிலையுறுப்பாக உடைய இந்நெட்டிரா என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: எனவே அன்று நெடுகாமையும் இன்று நெடுகுதலும் கண்டு மெலிந்துரைத்தவாறாயிற்று.
பரிமேலழகர்: காதலரோடு நாம் இன்புற்ற முன்னாள்களிற் குறியவாய், அவர் பிரிவாற்றேமாகின்ற இந்நாள்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள்; குறியவாய் - குறியனவாய்; நெடியவாய் - நீண்டனவாய்; கங்குல்கள் - இரவுகள்]
'இக்காலத்து நெடியவாய்க் கழிகின்ற இராப்பொழுதுகள்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இப்போது நேரமாகி விடியும் இரவுகள்', '(என் காதலர் என்னுடன் இல்லாத) இந்த நாட்களில் இரவும் மிகவும் நீண்ட நேரம் தாமத்து விடிகின்றது. அதனால்', 'பிரிவாற்றாமையால் வருந்தும் இக்காலத்திலே நெடுநேரஞ்சென்று கழிகின்ற இரவுகள்', 'தலைவரைப் பிரிந்திருக்கும் இந்நாளில் நீண்டனவாய்க் கழிக்கின்ற இரவுகள்' என்றபடி பொருள் உரைத்தனர்.
இந்நாட்களில் நீண்டதாகச் செல்லும் இரவுவேளைகள் என்பது இப்பகுதியின் பொருள்.
|