கண்தாம் கலுழ்வது எவன்கொலோ:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பின்னர் அக்கண்கள்தாம் காண்டல் வேட்கையாற் கலுழ்கின்றது யாவர் காட்டுவாராகக் கருதி?
பரிப்பெருமாள்: பின்னர் கண்கள்தாம் காண்டல் வேட்கையாற் கலுழ்கின்றது யாவர் காட்டுவாராகக் கருதியோ?
பரிதி: கண்டால் அழுவது எவன்கொலோ; .
காலிங்கர்: இன்று இக்கண் தாம் மிகுந்து இங்ஙனம் கலுழ்வது என்னை கொல்லோ;
பரிமேலழகர்: (நின் கண்கள் கலுழ்ந்து தம் அழகு இழவாநின்றன, நீ ஆற்றல் வேண்டும், என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) அன்று அத்தொழிலவாய கண்கள், இன்று எம்மைக் காட்டச் சொல்லி அழுகின்றது என் கருதி? [கலுழ்ந்து - அழுது; அன்று- காதலர் எதிர்ப்பட்ட அந்நாளில்; அத்தொழிலவாய- காணுதல் தொழிலை உடையவனாய்]
'அக்கண்கள், இன்று எம்மைக் காட்டச் சொல்லி அழுகின்றது என் கருதி?' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தந்த கண் இப்போது ஏன் அழுகின்றன?', 'அப்படியிருக்க எனக்கு இந்த வேதனையை உண்டாக்கி வைத்து விட்டு இந்தக் கண்கள் தாம் அழுகின்றனவே என்ன விந்தை!', 'அப்படி நமக்கு நோய் விளைத்த கண்கள் இப்போது அவரைக் காட்டச் சொல்லி அழுகின்றது எதனாலோ? ', 'அங்ஙனமிருக்கவும் இன்று கண்கள் எம்மைக் காட்டச் சொல்லி அழுகின்றது என் கருதி? ', என்ற பொருளில் உரை தந்தனர்.
கண்கள் அவரைக் காணவேண்டி அழுவது எதற்காகவோ? என்பது இப்பகுதியின் பொருள்.
தண்டாநோய் தாம்காட்ட யாங்கண் டது:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அமையாத நோயை யாங்கண்டது அந்நோய் செய்தாரைத் தாங்காட்டுதலானே யன்றே?
மணக்குடவ குறிப்புரைர் :இது தலைமகள் காட்டுவாரில்லை யென்று தோழியைக் குறித்துச் சொல்லியது
பரிப்பெருமாள்: அமையாத நோயை யாங்கண்டது அந்நோய் செய்தாரை காட்டுதலானே யன்றே?
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகள் காட்டுவாரில்லை யென்று தோழியைக் குறித்துச் சொல்லியது
பரிதி: நோய் செய்து தானே காட்ட யான் கண்டேன் என்றவாறு.
காலிங்கர்: தம்மாலும் நம்மாலும் தடுத்தற்கு அரிய உறுநோய் உறுதற்கு அன்று; அவரைத் தாம் காட்டிற்றாக யாம் கண்டது என்றவாறு.
பரிமேலழகர்: இத்தணியா நோயை யாம் அறிந்தது தாம் எமக்குக் காதலரைக் காட்டலான் அன்றோ; [தாம் - கண்கள்]
பரிமேலழகர் குறிப்புரை: 'காட்ட' என்பதற்கு ஏற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. 'இன்றும் தாமே காட்டுதல் அல்லது யாம் காட்டுதல் யாண்டையது'? என்பதாம். [இப்பொழுதும் கண்கள் தாமே எமக்குக் காதலரைக் காட்டுவதல்லாமல் யாம் அக்கண்களுக்கு அவரைக் காட்டுவது எவ்வாறாம்]
'தணியா நோயை யாம் அறிந்தது தாம் எமக்குக் காதலரைக் காட்டலான் அன்றோ' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தீராத நோயைக் கண்காட்ட நான் பெற்றேன். நோய்', 'எனக்கு இந்த ஓயாத காமவேதனை உண்டானது என்னுடைய கண்கள் அவரை எனக்குக் காட்டி ஆசை கொள்ளச் செய்ததால்தாம்', 'கண்கள் தாமே எனக்குக் காதலரைக் காட்டினமையாலன்றோ யாம் இத் தீரா நோயை துய்ப்பதாயிற்று', 'இந்தத் தணியாத நோயை நாம் அறிந்தது தாம் எமாக்குக் காதலரைக் காட்டலால் அன்றோ?' என்றபடி பொருள் உரைத்தனர்.
'தணியாத காமநோய்உண்டாக்கிய காதலரை இக்கண்கள் காட்டியதால்தானே நான் கண்டேன்' என்பது இப்பகுதியின் பொருள்.
|