பேணாது பெட்டார் உளர்மன்னோ:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விரும்பத்தகாததனை விரும்புவாரும் உளரோ?;
பரிப்பெருமாள்: விரும்பத்தகாததனை விரும்புவாரும் உளரோ?;
பரிதி: பேணாது துயரமுறுத்தவராகிய;
காலிங்கர்: தோழீ! இதற்கு என்னை காரணம்? உலகத்து தம்மை விரும்பாதவரைத் தாம் விரும்புவாரும் உளரோ? எங்கும் கண்டது இல்லை;.
பரிமேலழகர்: ('காதலர் பிரிந்து போயினாரல்லர், அவர் ஈண்டுளர். அவரைக் காணுமளவும் நீ ஆற்றல் பெற வேண்டும்', என்ற தோழிக்குச் சொல்லியது.) நெஞ்சால் விழையாதுவைத்துச் சொல்மாத்திரத்தால் விழைந்தவர் இவ்விடத்தே உளர்;
பரிமேலழகர் குறிப்புரை: செயலாற் பிரிந்துநின்றமையின் 'பேணாது' என்றும், முன் நலம் பாராட்டிப் பிரிவச்சமும் வன்புறையும் கூறினாராகலின், 'பெட்டார்' என்றும் கூறினாள். 'மன்' ஒழியிசைக்கண் வந்தது, [நலம் பாராட்டல்-தலைவியைப் புணரா முன் நின்ற வேட்கையன்பு புணர்ந்த பின்பும் மிகுதலால் அப்புணர்ச்சி நலத்தைத் தலைமகன் புகழந்து சொல்லுதல்; பிரிவச்சம்-பிரிதற்கு அஞ்சுதல். தலைவன்தான் பிரிய அஞ்சுதலும் அவளைப் பிரிய அஞ்சுவித்தலும் பிரிவச்சமாகும்; வன்புறை-தலைமகள் தலைவன் பிரிவனோ என்று ஐயுறவிடத்து ஐயம்தீர அவன் வற்புறுத்திக் கூறுதல்]
'விரும்பத்தகாததனை விரும்புவாரும் உளரோ?' என்றும் 'விரும்பாதவரைத் தாம் விரும்புவாரும் உளரோ?' என்றும் 'நெஞ்சால் விழையாது சொல்மாத்திரத்தால் விழைந்தவர் இவ்விடத்தே உளர்' என்றும் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மனமின்றியே காதலித்தார் ஒருவர் உளர்', 'என்மீது உண்மையான காதல் இல்லாமல் என்னுடன் பொய்யுறவு காட்டியவர் (என்னைப் பிரிந்து) எங்கோ இருக்கிறாராம்!', 'நெஞ்சால் விரும்பாது சொல்லால் மாத்திரம் விருப்பங் காட்டினவர் இருக்கின்றார். (அவரால் என்ன பயன்?)', 'நெஞ்சால் விரும்பாமல் சொல்லால் மாத்திரம் விரும்பியவர் இவ்விடத்தே உளர்', என்ற பொருளில் உரை தந்தனர்.
தம்மை விரும்பாதவரைத் தாம் விரும்புவாரும் உளரோ என்பது இப்பகுதியின் பொருள்.
மற்றவர்க் காணாது அமைவில கண்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நம்மைக் கண்டால் விருப்பமின்றிப்போன அவரைக் காணாது அமைகின்றில என் கண்கள்: இதனை ஒழியப் பிறவும் உளவோ?
பரிப்பெருமாள் ('காணாதமைவில என்பதற்குக் 'காணாதிமையல' பாடம்): நம்மைக் கண்டால் விருப்பமின்றிப் போனவரைக் காணாது இமைக்கின்றில என் கண்கள்: இதனை ஒழியப் பிறவும் உளவோ?
பரிப்பெருமாள் குறிப்புரை: சொல்லாது பிரிந்த தலைமகனது பெருமையை உட்கொண்டு வேட்கையால் கூறியது. விரும்பத் தகாது என்றமையால் சொல்லாது பிரிதலாயிற்று.
பரிதி: நம் நாயகரைக் காணாமல் கண் துயிலாது என்றவாறு.
காலிங்கர்: ('கொண்கணை' பாடம்) தோழீ! இவ்விடர் இரக்கத்திற்கு ஏதுவாகிய கொண்கனைப் பின்னுங் காணாவாயின் வாழாவாய் விட்டன இக்கண்களானவை.
பரிமேலழகர்: அவ்வுண்மையாற் பயன் யாது, அவரைக் கண்கள் காணாது அமைகின்றன இல்லையாயின்?
பரிமேலழகர் குறிப்புரை: மற்று' வினை மாற்றின்கண் வந்தது. 'ஓகாரம்' அசைநிலை. யான் ஆற்றவும் கண்கள் அவரைக் காண்டற்கு விரும்பாநின்றன என்பதாம். இனிக் 'கொண்கனை' என்று பாடமாயின் 'என் கண்கள் தம்மைக் காணாது அமைகின்ற கொண்கனைத் தாம் காணாதமைகின்றனவில்லை. இவ்வாறே தம்மையொருவர் விழையாதிருக்கத் தாம் அவரை விழைந்தார் உலகத்துளரோ'? என்று உரைக்க. இதற்கு 'மன்' அசைநிலை. ['மற்று' என்னும் இடைச்சொல் உளர் என்னும் வினையை மாற்றி இலர் என்னும் வினையைத் தந்தமையின் வினைமாற்று ஆயிற்று; மன்னோ-என்பதிலுள்ள ஓகாரம் அசைநிலை]
'விருப்பமின்றிப்போனாலும் அவரைக் காணாது அமைகின்றில என் கண்கள்' என்றும் 'கொண்கனைப் பின்னுங் காணாவாயின் வாழாவாய் விட்டன இக்கண்களானவை' என்றும் 'அவரைக் கண்கள் காணாது அமைகின்றன இல்லை; என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் 'மற்றவர்க்' என்பதற்குக் 'கொண்கணை' எனப் பாடம் கொள்கிறார். பரிப்பெருமாள் காணாதமைவில என்பதற்குக் 'காணாதிமையல' என்று பாடம் கொண்டார்.
இன்றைய ஆசிரியர்கள் 'அவரைப் பாராது கண்கள் தூங்கா', 'அவரைக் காணாமல் (உறக்கமின்றி அழுது) தவிக்கின்றன. என்னுடைய கண்கள். என்ன வஞ்சனை', 'அவரைக் காணாமற் கண்கள் அமைதி யடையமாட்டா', 'அவரைக் காணமுடியாமல் கண்கள் வருந்துகின்றன' என்றபடி பொருள் உரைத்தனர்.
அவரைக் காணாமல் என் கண்கள் அமைதி அடையமாட்டா என்பது இப்பகுதியின் பொருள்.
|