உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யான் எக்காலமும் நினைப்பேன், சொல்லுவதும் அவர் திறமே;
பரிப்பெருமாள்: யான் எக்காலமும் நினைப்பேன், என்றும் சொல்லுவது அவர் திறமே;
பரிதி: நினைப்பதும் உரைப்பதும் நாயகரையேயன்றி வேறுரையேன்;
காலிங்கர்: தோழி! யான் முதுகுரவர் ஆகிய பெரியோரையும் முகம் நோக்குதல் இன்றி எப்பொழுதும் மற்று அவரையே என் நெஞ்சினால் நினைத்திருப்பது பெரிது. மற்று என் நாவினால் உரைப்பது எப்பொழுதும் அவரது குணத்திறமே. இங்ஙனம் அவரிடை அற்றம் இன்றி எனது உரையும் மனமும் ஒருங்கு கலந்திருப்பவும் இவ்விடத்து வருகின்றது அற்றம் பார்த்தல் செய்வது அல்லாமையும்;
பரிமேலழகர்: ('பிரிகின்றவர் தெளிவித்த சொற்களையும் அவர் நல்திறங்களையும் அறிதியாகலின் நீட்டியாது வருவர்' என்ற வழிச் சொல்லியது.) அவர் சொற்களை யான் மனத்தால் நினையா நிற்பேன்; வாக்கால் உரைப்பதும் அவர் நல்திறங்களையே; [அறிதி ஆகலின் - அறிவாய் ஆதலால்; நீட்டியாது - காலஞ்தாழ்த்தாமல்]
'யான் எக்காலமும் நினைப்பேன், சொல்லுவதும் அவர் திறமே' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் நினைப்பது அவர் சொற்கள்; உரைப்பது அவர் நல்திறங்கள் என்றார்.
இன்றைய ஆசிரியர்கள் 'நினைப்பதும் பேசுவதும் எல்லாம் அவரையே', 'எந்நேரமும் அவரை என் உள்ளத்திலேயே வைத்திருக்கிறேன். நான் பேசுவதெல்லாம் அவரைப் பற்றியே!', 'அவரை மனத்தில் நினைக்கின்றேன். நான் பேசுவது அவர் நலங்களையே', 'அவர் சொற்களை உள்ளத்தால் நினைக்கின்றேன். வாயினால் சொல்லுவதும் அவர் நற்குணங்களையே', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நான் நினைப்பதும் சொல்வதும் அவர் குணத்திறங்களையே என்பது இப்பகுதியின் பொருள்.
கள்ளம் பிறவோ பசப்பு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இத்தன்மையேனாகவும் பசலை வஞ்சனையாகப் பரவா நின்றது. இதற்கு நிலை யான் அறிகிலேன்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஆற்றாமை மிகாநின்றதென்று கூறியது
பரிப்பெருமாள்: இத்தன்மையேனாகவும் பசலை பரவா நின்றது. இதற்கு நினைவு யான் அறிகின்றிலேன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: முன்பு களவுக்காலத்து வேட்கையால் அவரது செயலைக் கூறவும் நினைக்கவும் ஆற்றாமை நீங்கும்; இப்போது அதுபோல் அன்றி ஆற்றாமை மிகாநின்றதென்று கூறியது.
பரிதி: பசலை ஏன் வந்தது என்றவாறு.
காலிங்கர்: மற்றிது ஓர் வஞ்சனையாம். இத்துணையே பசக்கின்ற பசப்பு.
பரிமேலழகர்: அங்ஙனம் செய்யாநிற்கவும், பசப்பு வந்து நின்றது, இது வஞ்சனையாயிருந்தது.
பரிமேலழகர் குறிப்புரை: பிறவும், ஓவும் அசைநிலை. மெய் மற்றை மனவாக்குகளின் வழித்தாகலின், அதன் கண்ணும் வரற்பாற்றன்றாயிருக்க வந்தமையின், இதன் செயல் கள்ளமாயிருந்தது எனத் தான் ஆற்றுகின்றமை கூறியவாறாயிற்று. [பிறவோ என்பதிலுள்ள பிறவும் ஓவும் அசைநிலை; அதன் கண்ணும் - மெய்யின் உடம்பின் இடத்தும்]
'அங்ஙனம் இருக்கவும், பசப்பு வந்து நின்றது, இது வஞ்சனையாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இருந்தும் பசலைவந்தது கள்ளத்தனமா? வேறா?', '(அப்படியிருக்க நான் எப்படி அவரைப் பிரிந்தவளாவேன்?) அதனால் இந்தப் பசப்பு நிறம் வேறு சூதாக இருக்குமோ', 'அங்ஙனமிருக்கவும் இந்தப் பசப்பு எவ்வாறு வஞ்சமாய் வந்துவிட்டது', 'அங்ஙனமாகவும் பசப்பு வந்துவிட்டது. இது வஞ்சனையாக இருந்தது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
இருந்தும் பசலை வந்தது வஞ்சனையா? வேறோவா? என்பது இப்பகுதியின் பொருள்.
|