பசந்தாள் இவளென்பது அல்லால்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவள் பசந்தாளென்று எனக்குக் குற்றம் நாடுமதல்லது;
பரிப்பெருமாள்: இவள் பசந்தாளென்று எனக்குக் குற்றம் நாடுமதல்லது;
பரிதி: பசந்தாள் என்று சொல்லுவர் அல்லது;
காலிங்கர்:) நெஞ்சே! இவள் பசந்தாள் பசந்தாள் என்று எப்பொழுதும் என்னைக் குறைசொல்வது அல்லாமல்;
பரிமேலழகர்: ('நீ இங்ஙனம் பசக்கற்பாலையல்லை' என்ற தோழியோடு புலந்து சொல்லியது.) இவள் ஆற்றியிராது பசந்தாள் என்று என்னைப் பழி கூறுவதல்லது; [பசக்கற்பாலை அல்லை- பசப்பு நிறம் அடைதற்கு உரியை அல்லை]
'இவள் பசந்தாள் என்று என்னைக் குறைசொல்வது அல்லாமல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இவள் பசப்பெய்தினாள் என்று என்னைப் பழி கூறுகின்றாரே யன்றி', 'இவள் என்ன இப்படிப் பசந்துவிட்டாளே என்று எல்லாரும் ஏளனம் செய்கிறார்களே அல்லாமல்', 'இவள் பொறுத்திராது பசப்படைந்தாள் என்று என்னைக் குறைகூறுவதல்லது', 'இவள் ஆற்றியிராமல் பசந்தாள் என்று என்னைப் பழி கூறுவதல்லாமல்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
இவள் ஆற்றமாட்டாது பசப்படைந்தாள் என்று என்னைக் கூறுவதல்லாமல் என்பது இப்பகுதியின் பொருள்.
இவளைத் துறந்தார் அவரென்பார் இல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவளைத் துறந்தார் அவர் என்று அவரது கொடுமையைச் சொல்வார் இல்லை என்றவாறு.
மணக்குடவ குறிப்புரை: :இஃது இப்பசப்பு வரலாகாது என்று தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: இவளைத் துறந்தார் அவர் என்று அவரது கொடுமையைச் சொல்வார் இல்லை என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை : இப்பசத்தலாகாது என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: நாயகியைத் துறந்தார் இவர் என்று சொல்லுவாரில்லை என்றவாறு.
காலிங்கர்:) இவளைப் பிரிந்து நின்றார் அவர் மற்று இது காரணமாகத்தன்மேனி பசந்தாள் இவள் என்று இங்ஙனம் சொல்லுவார் எமக்கு ஒருவரும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: இவளை அவர் துறந்து போயினார் என்று அவரைக் கூறுவார் ஒருவருமில்லை.
பரிமேலழகர் குறிப்புரை: 'என்பார்' என வேறுபடுத்துக் கூறினாள், தன்னையே நெருங்குதல் பற்றிப் புலக்கின்றமையின். நெருங்குதல் - பொறுத்திருக்க வேண்டும் என்று பலமுறையும் கண்டித்துக் கூறுதல்]
'இவளைப் பிரிந்து நின்றார் அவர் என்று சொல்லுவார் ஒருவரும் இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அவர் இவளைப் பிரிந்து சென்றார் என்று அவரைப் பழி கூறுவார் யாருமில்லை', 'அவர் இவளை இப்படிப் பசக்கவிட்டுப் பிரிந்திருக்கிறாரே என்று பச்சாதாபபடுகிறவர்கள் யாருமில்லையே', 'அவர் இவளை விட்டுப் போயினாரென்று பழிப்பார் ஒருவருமில்லை', 'இவளை அவர் விட்டு நீங்கினார் என்று அவரைக் குறை கூறுவார் ஒருவரும் இலர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
இவளை நீங்கிச் சென்றிருக்கிறாரே என்று அவரைச் சொல்வார் ஒருவருமில்லை என்பது இப்பகுதியின் பொருள்.
|