மற்றுயான் என்னுளேன் மன்னோ:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அல்லது யாதொன்றினான் யான் உளேனாய் வாழ்கின்றேன்;
பரிப்பெருமாள்: அல்லது யாதொன்றினான் யாதனான் உளேனாய் வாழ்கின்றேன்;
பரிதி: நான் நாயகர் மனத்தில் எப்படி யிருந்தேனோ;
காலிங்கர்: தோழீ! அல்லது வேறு யான் என்பற்றி உள்ளேன் ஆகின்றேன்;
பரிமேலழகர்: (அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைந்து இறந்துபாடெய்தா நின்றாய்; அது மறத்தல் வேண்டும் என்றாட்குச் சொல்லியது.) அது இன்றாயின், வேறு எத்தால் உயிர் வாழ்வேன்? [புணர்ந்த ஞான்றை - கூடிய காலத்து; இறந்துபாடு எய்தாநின்றாய்- பெருந்துன்பத்தை (இறப்பது போன்றதை) அடைகின்றாய்; அது - அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைத்தல். ]
'அல்லது யாதொன்றினான் நான் உள்ளேன் ஆகின்றேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அஃது இல்லாவிட்டால் வேறு எதனால் உயிர் வாழ முடியும்?', 'அதனால் அன்றி, மற்று எதனால் உயிரோடும் உள்ளேன்?', 'நான் எப்படி உயிர் வாழ்கின்றே னென்றால்', 'அது இன்றாயின் வேறு எதனால் உயிர் வாழ்வேன்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அதுவல்லாமல் நான் எதற்காக உயிர் வாழ்கின்றேன்? என்பது இப்பகுதியின் பொருள்.
அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யான்அவரோடு புணர்ந்த நாள் இன்பத்தை நினைத்தலானே உயிர் வாழ்கின்றேன்.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகன் தலையளியை நினைந்து ஆற்றாளாயின தலைமகளை நோக்கி நீ இவ்வாறு நினைந்திரங்கல் உயிர்க்கு இறுதியாகுமென்ற தோழிக்கு அவள் கூறியது.
பரிப்பெருமாள்: யான்அவரோடு புணர்ந்த நாட்களை நினைத்தலானே உயிர் வாழ்கின்றேன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகன் தலையளியை நினைத்து ஆற்றாளாயின தலைமகளை நோக்கி நீ இவ்வாறு நினைந்திரங்கல் உயிர்க்கு இறுதியாகுமென்ற தோழிக்கு அவள் கூறியது.
பரிதி: நாயகரைக் கூடிய அன்று முதல் இன்றளவும் நாயகர் என் மனத்திலிருக்கிறார்; நான் எப்படி அவர் மனத்தில் இருந்தேனோ....... என்றவாறு.
காலிங்கர்: அங்ஙனம் நெஞ்சு சுடினும் யான் அவரோடு இன்புற்ற நாள்களை நினைய நினைய மற்று அது பற்றுக்கோடாக ஆற்றியுள்ளேன் ஆகின்றேன்.
காலிங்கர் குறிப்புரை: எனவே இவள் தூதுவிடுதல் பயன் என்றவாறு.
பரிமேலழகர்: யான் அவரோடு புணர்நத ஞான்றை இன்பத்தை நினைதலான் இத் துன்ப வெள்ளத்தும் உயிர் வாழ்கின்றேன்.
பரிமேலழகர் குறிப்புரை: நாள்: ஆகுபெயர். 'உயிர் வாழ்வதற்கு வேறும் உள, அவை பெற்றிலேன்' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. அவை அவன்தூது வருதல், தன்தூது சேறல் முதலாயின. 'அவை யாவும் இன்மையின், இதுவல்லது எனக்குப் பற்றுக் கோடு இல்லை', என்பது கருத்து. [முதலாயின என்றமையின், காதலர் வருந் தேரொலி கேட்டல், காதலர் வருதல் முதலியவற்றையும் கொள்ளலாம்; அவை -அவன் தூது வருதல், தன் தூது செல்லுதல் முதலாயின]
'யான்அவரோடு புணர்ந்த நாள் இன்பத்தை நினைத்தலானே உயிர் வாழ்கின்றேன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அவரோடு நான் கூடி முயங்கிய இன்ப நாளை நினைத்தலான் பிரிவு நாளிலும் உயிர் வாழ்கின்றேன்', 'துணைவரோடு யான் இனிதாகக் கூடியிருந்த நாளை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு உள்ளேன்', 'அவரோடுகூடியின்பம் நுகர்ந்த நாளை நினைப்பதாற் பிழைத்திருக்கின்றேன்', 'நான் அவரோடு கூடியபொழுது அடைந்த இன்பத்தை நினைத்தால் இத்துன்ப மிகுதியினும் உயிர் வாழ்கிறேன்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
யான் அவருடன் இருந்த நாள்களை நினைந்து நினைந்து மற்று அதனால் உயிர்வாழ்கின்றேன் என்பது இப்பகுதியின் பொருள்.
|