கனவினான் உண்டாகும் காமம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அக்கனவின் கண்ணே எனக்கு இன்பம் உண்டாகும்.
பரிப்பெருமாள்: காமம் அதன்கண்ணே உண்டாகும்.
பரிதி: இன்பமாகப் பெற்றது கனவிலே கூடினமுறையால் என்றவாறு.
காலிங்கர்: நெஞ்சே! கனவின் கண்ணும் எனக்கு உண்டாகா நின்றது ஓர் ஆசை என்றவாறு.
பரிமேலழகர்: (இதுவும் அது.) இக் கனவின்கண்ணே எனக்கு இன்பம் உண்டாகா நின்றது.
பரிமேலழகர் குறிப்புரை: காமம் - ஆகுபெயர். நான்காவது மூன்றன் பொருண்மைக்கண் வந்தது. [காமம் என்னும் கருவியின் பெயர் அதனால் உண்டாகும் இன்பத்தை உணர்த்துதலால் கருவியாகுபெயராம்]
'கனவின் கண்ணே எனக்கு இன்பம்/ஆசை உண்டாகும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கனவில் காமம் உண்டாகின்றது', 'கனவினாலும் காம இன்பம் கிடைக்கிறது', 'அக்கனவின்பால் எனக்கு அன்புண்டாகிறது', 'கனவின் கண்ணே எனக்கும் இன்பம் உண்டாகின்றது' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
கனவினிடத்தே எனக்கு காமஇன்பம் உண்டாகின்றது என்பது இப்பகுதியின் பொருள்.
நனவினால் நல்காரை நாடித் தரற்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால்.
மணக்குடவர் குறிப்புரை: இது கண்டாற் பயனென்னை? காம நுகர்ச்சியில்லையே என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கண்டாற் பயனென்னை? காம நுகர்ச்சியில்லையே என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: நனவினாலே நல்காரைப் பிரிந்தாரைப் பிரிந்தேன் என்ற துன்பம் விட்டு.
காலிங்கர்: நனவினிடத்து நல்காது பிரிந்த நம் காதலரைத் தேடிக் கொணர்ந்து தருதற்கு.
பரிமேலழகர்: நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை அவர் சென்றுழி நாடிக் கொண்டு வந்து கனவு தருதலான்.
பரிமேலழகர் குறிப்புரை: நான்காவது மூன்றன் பொருண்மைக்கண் வந்தது. 'இயல்பான் நல்காதவரை அவர் சென்ற தேயம் அறிந்து சென்று கொண்டு வந்து தந்து நல்குவித்த கனவால் யான் ஆற்றுவல்' என்பதாம். [ஆற்றுவல்=பொறுத்துக் கொள்வேன்]
'நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நனவில் அருளாதாரைத் தேடிக் காட்டுதற்கு', 'நனவில் வந்து எனக்கு இன்பம் தராத காதலரைத் தேடிப்பிடித்து என்னிடம் கொண்டுவந்து விடுவதனால்', 'நனவிலே வந்துஅருள் செய்யாதவரைக் கனவானது தேடிக் கொண்டு வந்து கொடுத்தலால்', 'நினைவின்கண் வந்து அன்பு செய்யாதாரைத் தேடித் தருவதனால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
நனவில் அருளாதாரைத் தேடித் தருவதனால் என்பது இப்பகுதியின் பொருள்.
|