நனவினால் நம்நீத்தார் என்பர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நனவின்கண்ணே நம்மை நீக்கியகன்றா ரென்று அவரைக் கொடுமை கூறாநிற்பர் இவ்வூரார் ;
பரிப்பெருமாள்: நனவின்கண்ணே நம்மை நீக்கியகன்றா ரென்று அவரைக் கொடுமை கூறாநிற்பர் இவ்வூரார் ;
பரிதி: நனவினாலே பிரிந்தார் என்று நம்மைத் தூற்றுவார்;
காலிங்கர்: நெஞ்சே! நம் காதலர் நம்மைக் கையகன்றனர் என்று நனவின்கண் அவரைக் கொடுமை கூறா நிற்பர்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) நனவின்கண் நம்மை நீத்தார் என்று நம் காதலரைக் கொடுமை கூறாநிற்பார்; {நீத்தார் - பிரிந்தார்]
'நனவின்கண்ணே நம்மை நீக்கியகன்றா ரென்று அவரைக் கொடுமை கூறாநிற்பர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நனவிலே விட்டுப்பிரிந்தார் என்பர் இவ்வூரார்', 'நனவில் நம்மைவிட்டுப் பிரிந்தார் என்று நம் காதலரைக் குறை கூறுவர்', '(இப்படி என் காதலரை நான் அடிக்கடி கனவில் சந்தித்து இன்பமடைவதை அறியாத ஊரார் என் காதலர் வரவேயில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்) என் காதலர் என்னை விட்டுப் பிரிந்திருப்பதை ஏளனம் செய்கிற', 'நனவில் நம்மைவிட்டு நீங்கி விட்டார் நம் தலைவர் என்று பழி கூறுவர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நனவில் நம்மைவிட்டு நீங்கி விட்டார் என்பர் என்பது இப்பகுதியின் பொருள்.
கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் அவரைக் கனவின்கண் காணார்களோ?
மணக்குடவர் குறிப்புரை: இஃது இவ்வேறுபாடு அலராயிற்று என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: இவ்வூரார் அவர் அவரைக் கனவின்கண் காணார்களோ?
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இவ்வேறுபாடு அலராயிற்று என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: கனவிலே வருவது காணார்கொல் இவ்வூரவர் என்றவாறு.
காலிங்கர்: இதற்கு என்னை காரணம்? கனவிடத்து யான் என் காதலரைக் காண்பேன் என்பதனால் அப்பொழுது தாமும் அவரைக் கண்டு கொள்ளாரோ இவ்வூரவராகிய மகளிர்.
காலிங்கர் குறிப்புரை: எனவே இனி அவரைக் கொடுமை கூறுகின்றது என்னை என்றவாறு?
பரிமேலழகர்: அவர் கனவின்கண் நீங்காது வருதல் கண்டறியாரோ இவ்வூரவர் ?
பரிமேலழகர் குறிப்புரை: 'என்னொடு தன்னிடை வேற்றுமை இன்றாயின், யான் கண்டது தானும் கண்டமையும், அது காணாது அவரைக் கொடுமை கூறுகின்றமையின் அயலாளேயாம்' என்னும் கருத்தால், 'இவ்வூரவர்' என்றாள். [என்னொடு தன்னிடை-எனக்கும் அவளுக்கும்; அது காணாது - கனவினிடத்துக் காதலர் நீங்காது வருதலைக் காணாமல்]
இவ்வூரார் அவரைக் கனவின்கண் காணார்களோ? என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கனவிலே வருவதை அறியமாட்டார்களோ?', 'இவ்வூர்ப் பெண்டிர் நம் காதலர் கனவில் நீங்காது வருதலைக் கண்டறியாரோ?', 'இந்த ஊரார், நானும் அவரும் கனவில் கலந்து மகிழ்வதைத் தாங்களும் கனவில் காண்பார்களானால் இப்படி ஏளனம் செய்ய மாட்டார்கள்', 'இந்த ஊரில் உள்ளவர்கள் அவர் கனவின்கண் நீங்காது வருதலைக் கண்டறிய மாட்டாரோ?' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
அவர் கனவில் நீங்காது வருதலை இவ்வூரார் அறியார்கள் போலும்! என்பது இப்பகுதியின் பொருள்.
|