காதல் அவரிலர் ஆகநீ நோவது:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் நம்மேற் காதலிலராக, நீ கூட்டத்தைக் கருதி வருந்துகின்றது;
பரிப்பெருமாள்: அவர் நம்மேற் காதலிலராக, நீ கூட்டத்தைக் கருதி வருந்துகின்றது;
பரிதி: ஆசை அவரிடத்திலே இல்லாதபோது நாயகரை நோவது; .
காலிங்கர்: நம்மைப் பிரிந்தார் ஒரு கால் நினைந்து வந்து அருளுவதோர் காதல் என்பது ஒன்று அவர் இலார்; விருப்பாயின் இனி நோவது;
பரிமேலழகர்: (தலைமகனைக் காண்டற்கண் வேட்கை மிகுதியால் சொல்லியது.) அவர் நம்கண் காதல் இலராகவும் நீ அவர் வரவு நோக்கி வருந்துதற்கு ஏது;
பரிமேலழகர் குறிப்புரை: 'நம்மை நினையாமையின், நங்கண் காதல் இலர் என்பதுஅறியலாம், அஃதறியாமை மேலும் அவர்பால் செல்லக் கருதாது அவர் வரவு பார்த்து வருந்தா நின்றாய்.
'அவர் நம்மேற் காதல் இல்லாதபோது, நீ கூட்டத்தைக் கருதி/வரவு நோக்கி வருந்துகின்றது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அவர் நம்மிடம் காதல் கொள்ளாதவராக இருக்க, நீ அவரை எதிர்நோக்கி வருந்துதற்குக் காரணம்', 'அவர் நம் மீது உண்மையான அன்புடையவர் அல்ல( என்பது நன்றாகத் தெரிகிறது): அதற்காக நான அவரைக் கொடியவர் என்றால் நீ வருத்தமடைவது', 'காதல் வைப்பவர் இங்கே இல்லாதிருக்க, நீ அவரைக் கருதி வருந்துவது', 'அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்கவும் நீ அவர் வரவு நோக்கி வருந்துவது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
காதல் உள்ளவராக அவர் இங்கே இல்லாதிருக்க நீ அவரை நினைந்து வருந்துவது என்பது இப்பகுதியின் பொருள்.
பேதமை வாழிஎன் நெஞ்சு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என் நெஞ்சே! பேதைமை.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அன்பிலார்மாட்டு வருந்தினாலும் பயனில்லை யென்றது.
பரிப்பெருமாள்: என் நெஞ்சே! பேதைமை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அன்பிலார்மாட்டு வருந்தினாலும் பயனில்லை யென்றது.
பரிதி: மிகவும் பேதைமை என்றவாறு.
காலிங்கர்: கேளாய் என்னுடைய நெஞ்சமே! நின் அறியாமை அல்லது பிறிது ஒன்று இல்லை என்பது என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: வாழி என்பது அசைச்சொல் என்று அறிக.
பரிமேலழகர்: (தலைமகனைக் காண்டற்கண் வேட்கை மிகுதியால் சொல்லியது.) என் நெஞ்சே, வாழ்வாயாக; நின் பேதைமையே, பிறிதில்லை.
பரிமேலழகர் குறிப்புரை: 'இது நீ செய்துகொள்கின்றது' என்னும் கருத்தால் 'பேதைமை' என்றாள். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு, 'யாம் அவர்பால் சேறலே அறிவாவது' என்பதாம்.[வாழி-இச்சொல் குறிப்பினால் இகழ்வதாகும்; சேறல்-செல்+தல் = செல்லுதல்]
'என் நெஞ்சே, வாழ்வாயாக; நின் பேதைமையே, பிறிதில்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'என் நெஞ்சே! வாழ்வாயாக. நின் அறியாமையே', 'என்னுடைய மனமே! மூடத்தனம்; உன்னை வாழ்த்துகிறேன் வருந்தாதே', நெஞ்சே! நீ வாழ்வாயாக; நின் அறியாமையே', 'என் நெஞ்சே வாழ்வாயாக! அறியாமையாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
என் நெஞ்சே வாழ்வாயாக! அறியாமையாகும் என்பது இப்பகுதியின் பொருள்.
|