தண்ணம் துறைவன் தணந்தமை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குளிர்ந்த துறையையுடையவன் நம்மை நீங்கினமையை;
பரிப்பெருமாள்: குளிர்ந்த துறையையுடையவன் நம்மை நீங்கினமை;
பரிதி: குளிர்மையுடைய கடற்றுறைக்கு நாயகன் துறந்தமை;
காலிங்கர்: தோழீ! நம் தண்ணந் துறைவன் நம்மை இடையிட்டமை;
பரிமேலழகர்: (இதுவும் அது.) குளிர்ந்த துறையை உடையவன் நம்மை மெய்யாற் கூடியிருந்தே மனத்தாற் பிரிந்தமையை; [துறைவன் - நெய்தல் நிலத்தலைவன்]
'குளிர்மையுடைய துறையையுடையவன் நீங்கினமை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் மட்டும் 'மனத்தாற் பிரிந்தமையைச்' சொல்கிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'குளிர்ந்த துறைவன் பிரிவான் என்பதை', 'குளிர்ந்த துறையையுடைய துறைவன் (நெய்தல் தலைவன்) பிரிந்து சென்றதை', 'அன்புள்ள என் காதலர் என்னை விட்டுப் பிரிந்து போனார் என்பதை', 'குளிர்ந்த துறையையுடைய தலைவன், நம்மை மனத்தினாற் பிரிந்தமையை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
குளிர்ந்த துறையையுடையவன், நம்மை மனத்தினாற் பிரிந்தமை என்பது இப்பகுதியின் பொருள்.
நம்மினும் முன்னம் உணர்ந்த வளை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாமறிவதற்கும் முன்னே வளைகள் அறிந்தன.
பரிப்பெருமாள்: நாம் அறிவதன் முன்னே வளைகள் அறிந்தன.
பரிப்பெருமாள் குறிப்புரை: தலைமகன் சொல்லாது பிரிந்துழி அதனை அறிந்த தோழி, 'இதனை அறிவித்தால் இவள் ஆற்றுங் கொல்லோ ஆற்றாள் கொல்லோ' என்று உட்கொண்டு பிரிவுணர்த்தச் சென்ற குறிப்பு நோக்கி, 'இதனை இப்பொழுது சொல்லுமாறு என்னை என்று பரியல்வேண்டா; யான் முன்பே அறிந்தேன்' என்று தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
பரிதி: நாம் அறிவதற்கு முன்னே நம்முனாக வளை அறிந்தது என்றவாறு.
காலிங்கர்: நம்மினும் முன்னமே தாம் அறிந்த, நம் கைக்கு அணி ஆகிய வளை, எனவே யாம் அவர் இடையீடு இன்று அறிந்தமை; இவை அவர் பெரிது அணிந்த அன்றே அறிந்தன காண்;
காலிங்கர் குறிப்புரை: எனவே யான் அவர் குணம் அயிர்க்க, அன்றுதொட்டு மெலிந்தன என் தோள் இணை என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: அவன் குறிப்பான் அறிதற்குரிய நம்மினும் இவ்வளைகள் முன்னே அறிந்தன.
பரிமேலழகர் குறிப்புரை: கருத்து நிகழ்ந்ததாகலின், 'தணந்தமை' என்றும், 'யான் தெளிய உணர்தற்கு முன்னே தோள்கள் மெலிந்தன' என்பாள், அதனை வளைமேலேற்றி, அதுதன்னை உணர்வு உடைத்தாக்கியும் கூறினாள். [கருத்து நிகழ்ந்தது ஆகலின் - பிரியும் எண்ணம் உண்டாயிற்று ஆதலால்; அதனை - தோள்களின் மெலிவை; அது தன்னை - வளையலை]
'நாமறிவதற்கும் முன்னே வளைகள் அறிந்தன' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நம்மினும் முந்தி வளையல்கள் உணர்ந்தன', 'நம்மைக் காட்டிலும் நம் வளையல்கள் முன்னமே அறிந்து கொண்டன', 'எனக்கும் முன்னால் அறிந்தவை என் வளையல்களே. (ஆகையால் அவர் பிரிந்து நான் அடைந்துள்ள மெலிவை வளையல்களே சொல்லட்டும்.)', 'நாம் உணர்வதற்கு முன்னமேயே நம் வளையல்கள் தெரிந்துகொண்டன' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
நம்மைவிட முன்னமேயே அறிந்து விட்டன நம் வளையல்கள் என்பது இப்பகுதியின் பொருள்.
|