தஞ்சம் தமர்அல்லர் ஏதிலார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஏதிலார் சுற்றமல்லாராவது சொல்லல் வேண்டுமோ?
பரிப்பெருமாள்: ஏதிலார் சுற்றமல்லார் ஆகுதல் எளிது;
காலிங்கர் ('தமர் அல்லார்' பாடம்): தோழீ! மற்று அயலார் தமக்குத் தஞ்சமும் அல்லார், துணி;
காலிங்கர் குறிப்புரை: தஞ்சம் என்பது எளிமைப் பொருட்டு இடுக்கண் உற்றவிடத்து எய்துதல் என்பது.
பரிமேலழகர்: (இதுவும் அது.) அயலார் தமர் அல்லராதல் சொல்ல வேண்டுமோ?
'ஏதிலார் சுற்றமல்லார் ஆகுதல் எளிது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அயலார், உறவினர் அல்லராதல் (உதவாதிருத்தல்) எளியதே', 'மற்ற யாரும் அவருக்கு உறவாக மாட்டார்கள்; (ஆகையால் நீதான் எனக்கு உறுதுணை; நான் உன்னை) தஞ்சமடைகிறேன்', 'அயலவர் தம்மவராகாமை எளிதே', 'அயலார் உறவினர் அல்லாராதல் எளிது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அயலார் உறவினர் அல்லாராதல் இயல்பு என்பது இப்பகுதியின் பொருள்.
தாம்உடைய நெஞ்சம் தமரல் வழி:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்முடைய நெஞ்சும் தமக்குச் சுற்றமல்ல வாகுங்காலத்து.
பரிப்பெருமாள்: தம்முடைய நெஞ்சும் தமக்குச் சுற்றமல்ல ஆகுங்காலத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: 'தலைமகன் யாண்டு உளன்' என்று குற்றேவல் மகளிரை அறியவிட, அவர் 'பரத்தையர் சேரியுளாள்' என்று கூறியவழி, 'அவர் வந்த காலத்தில் நெஞ்சு நம்வழி ஒழுகாது அவர் வழி ஒழுகினால் அவர் ஏதிலர் ஆகுவது எளிதன்றோ'' என்று நெஞ்சோடு புலந்து கூறியது. ஏதிலார் என்றாள், பிறர் மனையிற் செல்லுதலான்.
காலிங்கர் ('தம்முடைய' பாடம்): தோழீ! இவ்வுலகத்தில் தாம் தமக்கு உரிமையாக நெஞ்சம்கூடத் தமக்குத் துணை இல்லாத இடத்தினில், மற்று அயலார் தமக்குத் தஞ்சமும் அல்லார், துணி என்றவாறு.
பரிமேலழகர்: தாம் உரித்தாக உடைய நெஞ்சம் ஒருவர்க்குத் தமர் அல்லாவழி; [தமர் அல்லா வழி -உறவினர் ஆகாதபோது]
பரிமேலழகர் குறிப்புரை: 'பிறளொருத்தியைக் காதலி என்று கருதி என் நெஞ்சே என்னை வருத்தாநின்ற பின் அப்பிறள் புலக்கின்றது எளிது' என்பதாம். [பிறள் - வேறொருத்தி]
'தம்முடைய நெஞ்சும் தமக்குச் சுற்றமல்ல ஆகுங்காலத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தாம் உரிமையாகக் கொண்ட நெஞ்சம் தமக்கு உறவினர் அல்லாதபோது (உதவாதபோது)', 'மனமே! ஒருவருக்கு அவருடைய மனமே உறவற்றுப் போய்விட்டால்', 'தாம் உடைத்தாயிருக்கிற தமது மனம் தம்மோடிணங்காதவழி', 'தம்முடைய நெஞ்சம் உறவாகப் பொருந்தி நில்லாத போது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
தம்முடைய நெஞ்சம் உறவாகாத போது என்பது இப்பகுதியின் பொருள்.
|