புல்லாது இராஅப் புலத்தை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ('புலத்தி' பாடம்); நம் காதலர் வந்தால் புல்லாதிருந்து புலத்தல் வேண்டும்;
பரிப்பெருமாள் ('புலத்தி' பாடம்): நாம் காதலர் வந்தால் புல்லாதிருந்து புலக்க வேண்டும்;
பரிதி: இராக்காலம் இன்று சற்று நேரம் புலக்காமலிருந்து;
காலிங்கர் ('புலத்தல்' பாடம்): நம் காதலர் வந்தால் புல்லாது இருந்து புலத்தல் வேண்டும்;
பரிமேலழகர்: (வாயிலாகச் சென்ற தோழி தலைமகள் வாயில் நேர்தற்பொருட்டு அவளொடு நகையாடிச் சொல்லியது.) நீ அவரை விரைந்து சென்று புல்லாதே; இத்தொழிலை மேலிட்டுக் கொண்டிருந்து புலப்பாயாக.
பரிமேலழகர் குறிப்புரை: 'புலத்தை' என்புழி ஐகாரம் 'கடம்பூண்டொருகால் நீ வந்தை' (கலித்.குறிஞ்சி.27) என்புழிப்போல, முன்னிலை வினை விகுதி. 'புலத்தி' என்பதூஉம் பாடம்.
'காதலர் வந்தால் புல்லாது இருந்து புலத்தல் வேண்டும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'இரா' என்ற சொல்லுக்கு மற்றவர்கள் இருந்து என்று பொருள் கொள்ள பரிதி இராக்காலம் எனக் கொண்டார்.
இன்றைய ஆசிரியர்கள் 'தழுவாது இருந்து பிணங்குக', 'நீ அவரை விரைந்து சென்று முயங்காமல் இருந்து புலப்பாயாக', '(மனமே!) அவரைத் தழுவாமல் இருந்து பிணங்கிக் கொள்ளுக', 'அவரைத் தழுவாதிருந்து பிணங்குவாயாக', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
தழுவாது இருந்து பிணக்கம் கொள் என்பது இப்பகுதியின் பொருள்.
அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('அல்லல் யாம்' பாடம்): அவ்விடத்து அவருறும் கலக்கத்தை யாம் சிறிது காண்பேமாக.
மணக்குடவர் குறிப்புரை: இது வாயில் வேண்டிச் சென்ற தோழி தலைமகள் புலவிக் குறிப்புக் கண்டு முகங்கொடாமைப் பொருட்டு இனிமை கூறியது.
பரிப்பெருமாள்('அல்லல் யாம்' பாடம்): அவ்விடத்து அவருறும் கலக்கம் யாம் சிறிது பொழுது காண்பேமாக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வாயில் வேண்டிச் சென்ற தோழி தலைமகள் புலவிக் குறிப்புக் கண்டு முகங் கோடல் பொருட்டு இனிமை கூறியது.
பரிதி: நாயகர் வருத்தம் காணவேணும் என்றவாறு.
காலிங்கர்: அவ்விடத்து அவர்உறும் கலக்கம் யாம் சிறுது காண்போமாக என்றவாறு.
பரிமேலழகர்: அங்ஙனம் புலந்தால் காதலரெய்தும் அல்லல் நோயினை யாம் சிறிது காணக்கடவோம்.
பரிமேலழகர் குறிப்புரை: அல்லல் நோய் - துன்பத்தைச் செய்யும் காமநோய். 'சிறிது' என்றாள், புலவியை நீள விடலாகாது என்பது பற்றி. 'புலத்தி' என்பதூஉம் பாடம். புலவிக்குறிப்புக்கண்டு அவள் வழியளாய் நின்று, 'நாம் உற்ற வருத்தம் அவரும் சிறிதுற்று அறிதல் வேண்டும்' என நகையாடி நேர்வித்தவாறு.
'அவர்உறும் கலக்கம்/அல்லல் நோயினை யாம் சிறுது காண்போமாக' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அப்போது அவர் படும் துன்பத்தைச் சிறுது காண்போம்', 'அவ்வாறு புலந்தால்தான் காதலர் எய்தும் காமநோயினை நாங்கள் சிறுது காண்போம்', 'அவர் காம வேதனையால் படும்பாட்டைச் சிறுது (வேடிக்கை) பார்க்கலாம்', 'காதலர் அடையுந் துன்ப நோயினைச் சிறுது பார்ப்போம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அவர் படும் துன்பத்தைச் சிறுது பார்ப்போம் என்பது இப்பகுதியின் பொருள்.
|