இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0861 குறள் திறன்-0862 குறள் திறன்-0863 குறள் திறன்-0864 குறள் திறன்-0865
குறள் திறன்-0866 குறள் திறன்-0867 குறள் திறன்-0868 குறள் திறன்-0869 குறள் திறன்-0870

பகை-நண்பு என்பன பகைத்தார்-நட்டார் இருவர் மாட்டு நிகழும் பண்பு. இது ஒருவன் மாட்டு மாட்சியாம்போது மற்றவன்பால் சிறுமையாகவே முடியும். இருவர் மாட்டும் மாட்சியாதல் ஒரு போதும் இல்லை. இருவர் வேறல் இயற்கையன்றாதல்போல. ஆதலால் யார்மாட்டு மாண்பாகும்; யார் மாட்டு சிறுமையாகும் என்பதை விளக்கும் சொற்செட்டை வள்ளுவர் மேற்கொள்கிறார். ...... 'பகைமாட்சியாம் இடனும் உண்டு; அதனை நழுவவிடாமல் மேற்கொள்க' என்பார் சுவைகுன்றாமல் வெவ்வேறு வாய்ப்பாட்டான் பகைகொள்ளப்படுவான் இயல்புகளைத் தொகுத்துக் கூறி, அவனைப் பகைத்தலால் பகைப்பவனுக்கு வரும் நன்மைகளையும் குறிப்பித்து, பகைப்படுவானுக்கு நேரும் மாண்பின்மைகளையும் உடன் கூறிச் செல்கிறார். ஆதலால் பகைமாட்சி-பகையின் மாட்சி என்பதைக் காட்டிலும் பகையான் -(பகைகொண்டானுக்கு) வரும் மாட்சி என மூன்றனுருபும் பயனும் உடன்தொக்கதாகக் கோடல் தகும்.
- ச தண்டபாணி தேசிகர்

பகை விளைக்க வேண்டும் என்னும் நிலை வரும்போது தமக்கு ஓர் அழிவும் வாராது மாட்சிமைப்பட பகைவன் பற்றிய ஆராய்தல். யார்‌ யார்‌ பகைக்கத்தக்கார்‌, எத்தகைய பகைவர்‌ வெல்லுதற்கு எளியர்‌ என்பன‌ எடுத்துரைக்கப்படுகின்றன. பகைவன் குற்றங்களுடைமையால் பகை மாட்சிப்படுத்தப்படும். பகைக்கப்படுவானது குறைபாடுகளே இங்கு பெரிதும் பேசப்படுகின்றன.

பகைமாட்சி

மாட்சிமையுள்ள பகை என்பது என்ன?
பகைக்கப்பட்டான் இழிகுணம் பல படைத்தமையின் பகைத்தவன் பகை மாண்புறுகிறது. இதுவே பகை மாட்சி. அறிவின்மை, கண்ணைமறைக்கும் சினம் கொள்ளல், சுற்றந்தழுவாமை, துணையின்மை, கழிபெருங்காமம் போன்ற குற்றங்குறைகளாற் பகையைச் சிறப்பித்தல் பகைமாட்சியாம். பகைவரின் குணக்குறைபாடுகள் கூறப்பட்டு அவை இருப்பதால் அவரை எளிதாக வெல்லலாம்; எனவே அவருடன் பகை கொள்ளலாம் எனச் சொல்கின்றன இவ்வதிகாரத்துப் பாடல்கள். தனக்கு நன்மை பயக்குமாறு பகையையும் பயன்படுத்திக்கொள்ள வழிகாட்டுகிறது இத்தொகுதி.

பொதுவாழ்வில் மாறுபாட்டை வளர்த்து தீமை செய்வாரைப் பொறுப்பதற்குண்டான அளவு மீறிப்போய்விட்டால் பகையைத் தாக்கி அழிப்பது அறம் ஆகுமே அல்லாமல், தீமை செய்யும் சிலரைப் பொறுத்து அவர்களுக்கு இடம் கொடுப்பது அறம் அன்று; ஆகையால், இகல் வேண்டாம் என்று அறிவுறுத்திய வள்ளுவர் வளர்ந்துவிட்ட பகையை ஒழிப்பதே கடமை என்று இங்கு கூறுகின்றார். அவ்வாறு பகைகொண்டு நன்மை செய்ய முயலும்போது, யாருடன் பகைகொள்கிறோம் என்று எண்ணிப் பார்த்து வெல்லக் கூடிய இடத்தில் மட்டுமே பகை கொள்ள வேண்டும். தம்மைவிட வலிமை மிகுந்தவர்களைப் பகைத்து எதிர்ப்பதால் நோக்கம் நிறைவேறாது; தோல்வியும் அழிவும் நேரும். ஆகையால் தம்மைவிட வலியார்க்குப் பகையாதலைத் தவிர்க்க வேண்டும். அவர்களை எதிர்க்காமல் இருப்பதே நல்லது. தம்மின் வலியாரோடு பகை கொள்ளற்க என்றது கோழைத்தனம் ஆகாதோ? தம்முடைய வலிமையைப் பெருக்கி வளர்த்துக் கொண்டு உரிய காலம் வரும்பொழுது பகை கொண்டு வெல்லுதல் நலம் பயக்கும் என்பது கருத்து. தம்மை விட மெலியவர் மேல் பகை கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது.

அன்பு இல்லாத போது, நல்ல துணை இல்லாதபோது, தானும் வலியில்லாதபோது, ஒருவர் பகைவனுடைய ஆற்றலை ஒழிக்க முடியாது. எதற்கும் அஞ்சுகின்றவனாய், அறிய வேண்டியவற்றை அறியாதவனாய், பிறரோடு பொருந்தி வாழும் பண்பில்லாதவனாய், ஈகைத் தன்மை அற்றவனாயும் இருப்பவன் பகை இல்லாத வழியும் அழிந்துவிடுவானாதலால் அவன் பகைவரை வெல்லுதல் என்பது அரிது; அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான். ஒருவன் சினம் நீங்காதவனாகவும் மறை காக்கமுடியாதவனாகவும் இருந்தால் அவனை வெல்லுதல் எக்காலத்தும், எவ்விடத்தும், எவர்க்கும் எளிது. ஒருவன் நல்லவழியை நோக்காமல், பொருந்துவனவற்றைச் செய்யாமல், தீய செயலால் வரும் பழியை அஞ்சாமல் நற்பண்பும் இல்லாமல் இருந்தால், அவனது பகைமை மாற்றார்க்கு இனியதாகும். கண்ணைமறைக்கும் கடும் சினத்தை உடையவனாய், கழிபெருங்காமம் உடையவனாய் இருப்பவனது பகைமையை பிறர் விரும்பிக் கொள்வர். போரைத் தொடங்கி அண்மையில் இருந்து கொண்டு போர்த்தொழிலுக்கு மாறானவற்றைச் செய்பவனுடைய பகைமையைப் ஏது கொடுத்தேனும் கொள்ள வேண்டும், அத்தகையவரை எளிதில் வெல்ல முடியும் என்பதால். பண்பு ஏதும் இல்லாதவனாய், குற்றங்கள் பலவுடையவனாய் ஒருவன் இருப்பின், அவனது நிலை பகைவர்க்கு நன்மை பயக்கும். போர்செய்யும் அறிவு அற்று, பகைவரை எதிர்காணின் அஞ்சும் இயல்புடையவரைப் பெற்றால் அவருடன் போரிடுவார்க்கு வெற்றி இன்பங்கள் நெருங்கி நிற்கும்.
ஆட்சி நெறி அறியாதவனைப் பகைப்பதால் வரும் சிறு பொருளை அடைய மாட்டாதவனைப் புகழ் ஒரு போதும் சேராது.
இவை பகைமாட்சி அதிகாரம் கூறும் செய்திகள்.

குற்றம் உடைமையாலே பகைவன் மெலிதாகத் தோன்றுகிறான். அம்மெலிய இயல்பைப் பயன்படுத்தி வெற்றிகொள்க என்று விதிப்பது இவ்வதிகாரம்.

பகைமாட்சி அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 861ஆம் குறள் தம்மைவிட வலிமையுடையவரைப் பகையாய் எதிர்த்தலைத் தவிர்க; தம்மைப் போற்றாத எளியவரிடத்துப் பகை கொள்ளுதலை விரும்புக என்கிறது.
  • 862ஆம் குறள் அன்பில்லாதவன், பொருந்திய துணையில்லாதவன், தானே வலியில்லாதவன் பகைவனது வலிமையை எவ்வாறு தொலைப்பான் எனக் கேட்கிறது.
  • 863ஆம் குறள் எல்லாவற்றிற்கும் அஞ்சுபவன், அறிய வேண்டுவனவற்றை அறியான், பிறரோடு பொருந்த நடவான், கொடுக்க மனமில்லாதவன்; இவ்வியல்புகளைக் கொண்டவன் பகைவன் வெல்லுதற்கு மிக எளியனாவான் எனக் கூறுகிறது.
  • 864ஆம் குறள் சினத்திலிருந்து நீங்காதவன்; மன உறுதிப்பாடு இல்லாதவனை எப்பொழுதும் எவ்விடத்தும் எவர்க்கும் வெல்லுதல் எளிது என்கிறது.
  • 865ஆம் குறள் நல்ல வழிகளை ஆராயான், வாய்ப்புடைய செயல்களைச் செய்யான், தனக்கு வரும் பழிக்கு அஞ்சான், நற்குணமுடையன் அல்லன் இவனோடு கொண்ட பகைமை பகைவர்க்கு இனிது எனச் சொல்கிறது.
  • 866ஆம் குறள் கண்ணைமறைக்கும் சினத்தை உடையவனாய், அளவுக்குமீறிய காமமுடையவனாய் இருப்பவனது பகைமை பகைவரால் விரும்பிக்கொள்ளப்படும் என்கிறது.
  • 867ஆம் குறள் பகையாயிருந்தும் பகைக்காவன செய்யாது பிறிது செய்வானது பகையை எது கொடுத்தும் உறுதியாகக் கொள்ளவேண்டும் எனச் சொல்கிறது.
  • 868ஆம் குறள் குணம் ஒன்றும் இல்லாதவனாய்க் குற்றங்கள் பல உடையனாய் இருப்பின் அவன் துணை இல்லாதவனாவான்; அது பகைவர்க்குப் பாதுகாப்பான பயன் உடையதாகும் என்கிறது.
  • 869ஆம் போர் செய்யும் அறிவற்ற, பகைவரை எதிர்காணின் அஞ்சுகின்றவரைப் பெற்றால் எதிர்த்துப் போரிடுபவர்க்கு இன்பங்கள் தொலைவாக நீங்கிப் போகா என்கிறது.
  • 870ஆவது குறள் அரசியல் கல்லாதவனைப் பகைத்துச் சிறிய பொருளும் ஈட்டமுடியாதவனை எக்காலத்தும் புகழ் பொருந்தாது என்கிறது.

பகைமாட்சி அதிகாரச் சிறப்பியல்புகள்

பகையை யாராவது விலை கொடுத்து வாங்குவார்களா? மிக எளிதில் வெல்ல முடியுமானால் அப்பகையை வாங்கலாம் என்கிறது இவ்வதிகாரத்துக் குறள் ஒன்று. கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை (867) என்ற பாடல் செயல் தொடங்கியபின் அச்செயலுக்கு மாறானவற்றில் ஈட்டுபட்டிருப்பவன் பகையைக் கொள்வதற்கு விலை கொடுக்கலாம் என்கிறது.

குணன்இலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு இனன்இலனாம் ஏமாப்பு உடைத்து (868) என்ற குறள் குணம் இல்லாதவானய் குற்றங்கள் பல உடையவனாய் அவனுக்குத் துணையாய் உள்ளவர் யாரும் இல்லாதவனாய் இருப்பவனது பாதுகாப்பற்ற நிலைமை அவனைப் பகைத்து அவனையடக்கச் செல்கிறவனுக்குக் காப்பாக இருக்கும் எனச் சொல்கிறது. இப்பாடல் அதிகாரத்துத் தொகுப்புரை போன்று உள்ளது.

இவ்வதிகாரத்து மற்றக் குறள்கள் பகைக்கப்பட்டானது குறைபாடுகளைக் கூற கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லாது ஒளி (870) என்ற பாடல் ஆட்சிநெறி கல்லாதவனைப் பகைத்துச் சிறு பொருளும் செய்ய முடியாதவன் எக்காலத்தும் புகழ் அடையமுடியாது எனப் பகைகொள்பவனைச் சீண்டுகிறது.




குறள் திறன்-0861 குறள் திறன்-0862 குறள் திறன்-0863 குறள் திறன்-0864 குறள் திறன்-0865
குறள் திறன்-0866 குறள் திறன்-0867 குறள் திறன்-0868 குறள் திறன்-0869 குறள் திறன்-0870