இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-1211 குறள் திறன்-1212 குறள் திறன்-1213 குறள் திறன்-1214 குறள் திறன்-1215
குறள் திறன்-1216 குறள் திறன்-1217 குறள் திறன்-1218 குறள் திறன்-1219 குறள் திறன்-1220

நினைவே கனவாகும் என்பர் சிலர். தலைவனை நினைந்து புலம்பிக் கொண்டிருக்கும் தலைவியின் கனவில் தலைவன் தோன்றுவது இயல்புதானே! கனவில் தோன்றிய தலைவனைப் பற்றித் தலைவி கூறி ஆறுதல் அடைகின்றாள்.
- சி இலக்குவனார்

தலைமகள் பிரிவில் உள்ள கணவரைப்பற்றித் தான்கண்ட கனவுகளின் இயல்பை சொல்லுதல். தான் கனவு காண்பதற்கு வழி செய்யும் வகையில், கலக்கமுற்று இருக்கும் கண்களை உறங்குமாறு கெஞ்சுவேன் என்கிறாள் தலைவி. கனவில் காதலனைக் கண்டு, கலந்து, மகிழ்கிறாள். 'விழிப்பு ஏன் வருகிறது? கனவில் வந்த காதலர் பிரிந்துவிட்டாரே!' எனச் சொல்லி கனவுநிலை தொடரவேண்டும் என விழைகிறாள். கனவில் காதலரைக் காண அறியாதவர்தாம் நனவில் அருள் செய்யாதவரை நொந்து உரைப்பர் என்கிறாள் அவள்.

கனவுநிலை உரைத்தல்

'மனம் எதை மிகுதியாக நினைந்து ஏங்குகிறதோ. அது கனவிலும் வந்து அமையும். பகலெல்லாம் அதையே எண்ணி எண்ணி ஏங்கிய பிறகு, இரவில் ஓய்ந்து உறங்கும் மூளையில் அந்த எண்ணமே மேலெழுந்து நிற்கும். இவ்வாறு மூளையில் மேலெழும் எண்ணமே கனவு எனப்படுவது' (மு வரதராசன்). பணி காரணமாகச் சென்றுள்ள கணவரின் பிரிவை எண்ணி ஆற்றமுடியாமல் அவரையே எப்பொழுதும் தலைவி நினைத்துக் கொண்டிருப்பதால் கனவில் அவர் தோன்றுகிறார். கணவருடன் இல்லாமல் தனிமையில் துயருற்றிருக்கும் அவள் கனவில் அவர் வந்ததால்தான் தன் உயிர் நிலைத்திருக்கிறது என்று சொல்கிறாள். நனவு போன்றே கனவிலும் தலைவருடன் கூடி இருப்பது இன்பம் தருகிறது என்று சொல்லிப் பிரிவாற்றாமையைத் தணிக்க முயற்சிக்கிறாள். உறக்க நிலையில்‌ அவர் கனவில் தோன்றுவதும்‌ விழிப்பு நிலையில்‌ நினைவில்‌ உறைவதுமாக எப்பொழுதும் தன்னுடனேயே இருப்பதாக எண்ணிக்கொள்கிறாள். கனவு கலைந்ததும் உடனிருந்த தலைவர் நீங்குவது அவளுக்கு ஏமாற்றமாயிருக்கிறது. விழிப்பு வாராதுபோனால் கனவு நிலையில் எப்பொழுதும் அவர் தன்னுடனேயே இருப்பாரே எனத் தலைவி எண்ணுகிறாள். பிரிவுக்கு முன் நனவில் கணவருடன் இருந்தபோது, அந்த நனவு நிலை தலைவிக்கு இன்பமாய் இருந்தது. இப்பொழுது கனவில் காதலர் காட்சி தந்து இன்பமளிப்பது அவளுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. எனவே, 'நனவு என்ற ஒன்று எதற்கு வருதல் வேண்டும்? எப்பொழுதுமே கனவு உலகில் வாழ்ந்து அவருடன் இன்பம் துய்த்துக் கொண்டிருப்பேனே! நனவு என ஒன்று இருப்பதனால் அது கூடவில்லையே!' எனக் கனவின்மேல் காதல் கொண்டவளாகக் கூறுகின்றாள் தலைவி.

கனவுநிலை உரைத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 1211 ஆம்குறள் காதலரிடமிருந்து தூதுகொண்டு வந்த கனவுக்கு விருந்தாக நான் என்ன செய்வேன்? என்று தலைவி கூறுவதைச் சொல்கிறது.
  • 1212 ஆம்குறள் கயல்மீன் போன்ற பிறழ்ச்சியுடைய கண்கள் தூங்குமானால் கனவில் கூடும் காதலரிடம் நான் உயிருள்ளமை பற்றிச் சாற்றுவேன் எனத் தலைவி கூறுவதைச் சொல்வது.
  • 1213 ஆம்குறள் நேரில் பார்க்கமுடியாத காதலனைக் காணவைத்து தலைவியின் உயிர் நிலைக்கத் துணை செய்கிறது கனவு என்பதைக் கூறுவது.
  • 1214 ஆம்குறள் நனவில் அருள் செய்யாத தலைவரைத் தேடித் தருவதனால் கனவு மீது எனக்குக் காதல் உண்டு என்று தலைவி சொல்வதைக் கூறுகிறது.
  • 1215 ஆம்குறள் நனவிலே தலைவரைக் கண்டதும் இன்பம் ஆவதுபோல கனவிலேயும் அவ்வாறே அவரைக் காணும்பொழுதே இன்பம் ஆயிற்று எனத் தலைவி கூறுவதைச் சொல்வது.
  • 1216 ஆம்குறள் நனவு ஏன் வந்தது? கனவில் வந்த காதலர் பிரிந்துவிட்டாரே! விழிப்புநிலை என்ற ஒன்று இல்லையாயின் கனவில் தோன்றிய காதலர் என்னை விட்டுப் பிரியவேமாட்டார் என்று தலைவி சொல்வதைக் கூறுகிறது.
  • 1217 ஆம்குறள் நேரில் வந்து அருள் செய்யாத கொடிய காதலர், கனவிலே வந்து, இன்பம் தந்துவிட்டு நீங்கி, நம்மை வருத்துவது எதனாலே? எனத் தலைவி கேட்பதைச் சொல்கிறது.
  • 1218 ஆம்குறள் நான் உறங்கும்போது என்மேல் படர்ந்து இருந்துவிட்டு விழித்தவுடன் விரைந்து சென்று மறுபடியும் என் நெஞ்சிற்குள் புகுந்து கொள்வார் என்ற தலைவியின் கவிதைவரியைச் சொல்கிறது.
  • 1219 ஆம்குறள் கனவில் தம் காதலரைக் கண்டுஇன்புறாதவரே நேரில் வந்து அருளாத அவர் குறித்து நொந்து உரைப்பர் எனத் தலைவி சொல்வதைக் கூறுவது.
  • 1220 ஆவதுகுறள் கனவிலே கணவர் நீங்காது வருதலை இவ்வூரார் அறியார்கள்போலும்! நனவிலே நம்மைவிட்டு அவர் நீங்கி விட்டார் என்று இவ்வூரார் குறை கூறுவர் என தலைவி கூறுவதைச் சொல்வது.

கனவுநிலை உரைத்தல் அதிகாரச் சிறப்பியல்புகள்

கணவர் எஞ்ஞான்றும் தனக்குக் காட்சி தரவேண்டும் என விரும்புபவள் தலைவி. அயல் சென்றுள்ள அவரைக் கனவில் காண்பதால்தான் தன் உயிர் உள்ளது எனச் சொல்கிறாள். நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர் (குறள் 1213) என்கிறது அப்பாடல்.

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து (குறள் 1218) என்ற பாடலின் உட்கருத்து தலைவியின் கனவில் தலைவர் வந்து மெய்யுறு புணர்ச்சி கொண்டு இன்பம் தருகிறார் என்பது. அதை இடக்கரடக்கலாகக் கூறத் தோள்மேலர் என்ற தொடர் ஆளப்பட்டது. அடுத்து, தலைவி விழித்தவுடன் காதலர் விரைந்து நெஞ்சில் நிறைகிறார் என்று சொல்லி, இதை ஒரு நயமிகு கவிதையாக்கி வழங்குகிறார் வள்ளுவர்.




குறள் திறன்-1211 குறள் திறன்-1212 குறள் திறன்-1213 குறள் திறன்-1214 குறள் திறன்-1215
குறள் திறன்-1216 குறள் திறன்-1217 குறள் திறன்-1218 குறள் திறன்-1219 குறள் திறன்-1220